×

கோவையில் பணமோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட அமமுக பிரமுகர் கைது..!!

கோவை: கோவையில் பணமோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். மோசடியில் ஈடுபட்ட அ.ம.மு.க. பிரமுகர் பூலோக பாண்டியனை கோவை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். சிங்கப்பூர் தொழிலதிபரிடம் இழந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி கோவை அலுமினிய வியாபாரி ரவியிடம் பூலோக பாண்டியன் கைவரிசை காட்டியுள்ளார்.

அலுமினிய வியாபாரி ரவியிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த அமமுக பிரமுகர் பூலோக பாண்டியன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் வசிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கோவை அலுமினிய வியாபாரி ரவி ரூ.60 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். பல மாதங்கள் கழித்தும் பணத்தை சிங்கப்பூர் தொழிலதிபர் திருப்பித் தராததால் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தொழிலதிபர் கண்ணனின் ஊரைச் சேர்ந்த அமமுக பிரமுகர் பூலோக பாண்டியன், பணத்தை மீட்டுத் தருவதாக கோவை அலுமினிய வியாபாரி ரவியிடம் கூறியுள்ளார். தொழிலதிபர் கண்ணன் சொத்து அடகில் உள்ளதாகவும் ரூ.13 லட்சம் தந்தால் சொத்துகளை மீட்டு ரூ.60 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.

அமமுக பிரமுகர் பூலோக பாண்டியனின் பேச்சை நம்பி வியாபாரி ரவி ரூ.13 லட்சம் கொடுத்த நிலையில் திருப்பித் தராததால் போலீசில் புகார் அளித்துள்ளார். அலுமினிய வியாபாரி ரவி புகாரை அடுத்து பூலோக பாண்டியனை கோவை போலீசார் கைது செய்தனர்.

The post கோவையில் பணமோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட அமமுக பிரமுகர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : AMUKA PRAMUGUK ,KOWAI ,GOA ,Ammuka Pramukh ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை